Sunday, March 20, 2016

சயந்தனின் ஆறாவடு

2009ம் வருடம் போர் உச்சத்தில் இருந்த போது, முல்லைதீவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி தப்பி பிழைப்பதற்க்காக 21 பேர் ஒரு சிறிய படகில் பயணம் செய்தார்கள். இலங்கை ராணுவம், இந்திய கடலோரகாவல் போன்றவற்றை எல்லாம் எப்படியோ மீறி பயணம் தொடர்ந்தது. ராமேஸ்வரம் அருகில் இருக்கிறதே என்ற எண்ணத்தில் உணவுக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. கடல் நடுவே வழி தவறியது. நாட்கணக்கில் பயணம் செய்தும் கரை தெரியவில்லை. ஒவ்வொருவராக செத்து விழுந்தனர். கடைசியில் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் 11 பேர் குற்றுயிராக கரை ஒதுங்கினார்கள். தனது குடும்பத்தில் இரண்டு மகன்கள், மகள் மற்றும் கணவர் தன் கண்ணெதிரே பசியால் துடிதுடித்து செத்தனர் என்று கதறி அழுதார் மேரி என்ற பெண்மணி. இப்படி எத்தனையெத்தனை சம்பவங்கள்? இங்கு என்ன நடந்தது என்று கூற மேரி மட்டுமாவது உயிர் தப்பினார். படகு கவிழ்ந்து மொத்தமாக செத்தவர்கள் கடைசியாக செல்ல நினைத்தது எங்கே? சொல்ல நினைத்தது என்ன? ஆழ்கடலின் அடியே மெளனித்தவர்கள் எந்த நம்பிக்கையில் படகு ஏறினார்கள்?



எல்லா பயணங்களும், கரையின் அந்த பக்கம் மீதமிருக்கும் ஒரு துளி இரக்கத்தையும், கருணையையும் நம்பியே தொடங்கபடுகிறது. தமது சொந்தமண்ணில் எஞ்சியிருந்த கடைசி துளி மனிதமும் செத்துவிழுந்த பிறகு, சிறிய தோல்பேக்கில் தமது உடமைகளை எல்லாம் அடைத்து, கைவிட்ட கடவுள்களின் பிரசாதத்தை மடித்து ஒரு மூலையில் சுருட்டிக் கொண்டு, மறுகரை நோக்கி பயணித்தவர்கள் இவர்கள். இவை எல்லாம் எங்கோ ஒரு தூர தேசத்தில், எப்போதோ ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிகாலத்தில் நடந்தது அல்ல.நம் கண்ணெதிரே, நம் கைகள் தொட்டுவிடும் தூரத்தில், நடந்ததுதான். இவர்களின் வாழ்க்கையை/சாவை, எழுத்தில் ஆவணபடுத்தி இருக்கிறார் தமது முதல் நாவலான ஆறாவடு நாவலில் சயந்தன்.



1987ம் வருடம் தொடங்கி 2003 வரையிலான காலகட்டத்தை களமாக கொண்டு விரிகிறது நாவல். ராணுவ ஆக்ரமிப்பு, மக்கள் கைக்குழந்தைகளை தூக்கிகொண்டு ஒரு சிறிய சாக்குபையில் உடமைகளை அடக்கிகொண்டு புலிகளின் பகுதி நோக்கி இடப்பெயர்வு என இறுதிபோரில் என்ன நடந்ததோ அதுதான் அந்த காலக்கட்டத்திலும் நடக்கிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை உடனடியாக தூக்கி செல்லமுடியாததால், நான்கு கிளாஸ் தண்ணீர், கொஞ்சம் உணவு போன்றவற்றை அருகில் வைத்துவிட்டு மனைவி மக்களை கொண்டு பாதுகாப்பாக விட்டுவிட்டு, திரும்ப வந்து அழைத்துக் கொள்ளலாம் என்று போகிறார் சிவராசன். திரும்புவதற்க்குள் ராணுவம் நுழைந்துவிடுகிறது. பலமாதங்கள் கழித்து திரும்ப செல்கையில், தண்ணீர் கிளாஸ்கள் காலியாக கிடக்கின்றன. அருகிலேயே மட்கிபோய் தாயின் சடலம்.

இத்தாலியை நோக்கி படகில் பயணிக்கும் முன்னாள் போராளி அமுதன் ஊடாக நாவல் சொல்லபடுகிறது. ஒட்டுமொத்த மக்களின் சுதந்திரம் தேடி போராடுகையில், தனிமனித சுதந்திரம் என்னவாகும் என்பது சிக்கலான கேள்வி. சமாதானமான சூழலில், சகல வசதிகளுடன் வாழும் மக்களிடையே செயல்படும் தனிமனித சுதந்திரம், போர்சூழலில் பேணபடுமா? புலிகள் மீதான கேள்விகளை நேரு வாத்தியர் அமுதனிடம் தொடர்ந்து முன்வைக்கிறார். அவரே ஒரு பொதுவெளியில் புலிகளை பாராட்டுகிறார். ஒரு பெரிய அறத்துக்காக, சிறிய தவறுகள் மன்னிக்கபடலாமா? உண்மையில் எது பெரிய அறம்? சிறிய தவறுகள் என்பது அந்த தனிமனிதனின் வாழ்க்கையை பொறுத்தவரை உயிர் பிரச்சினையல்லவா? எதுவரை இந்த சமரசம் செல்லலாம்?

அதே படகில் பண்டார என்னும் சிங்களவனும் பயணிக்கிறான். கடுமையான வறுமையிலிருந்து குடும்பத்தை காப்பாற்ற ராணுவத்தில் சேர்ந்தவன். போர் சூழல் பயமளிக்க உயிரை காப்பாற்றிகொண்டு தப்பித்து செல்கிறான். இனவெறி எல்லாம் மூன்று வேளையும் உணவருந்த முடிந்தவர்களுக்கு தானே?

அதேவேளையில், உச்சக்கட்ட போர்சூழலில் வாழும்போதும் தமிழர்கள் சிலர் சாதியை விடுவதாய் இல்லை. புலிகள் தமது அதிகாரத்தை கொண்டு சாதிய ஆதிக்கவாதிகளை அடக்குவதை சயந்தன் அழுத்தமாக்க பதிவுசெய்கிறார். பெண்களை கேலி செய்பவர்களுக்கு தண்டனை வழங்கபடுகிறது. பெண்கள் இயக்கத்தில் இருக்கும்போது அனுபவித்த சுதந்திரம், இன்று போர் முடிந்த சூழலில் மறுக்கபடுகிறது. இவை எல்லாம் சயந்தன் மட்டுமின்றி, ஸ்ர்மிளா தமது உம்மத் நாவலில் காட்சிபடுத்துகிறார். புலிகளை எதிர்ப்பதையே, ஈழவிடுதலைக்கான செயற்பாடாய் கொண்டிருந்தவர்கள், இன்று புலிகள் இல்லாத சூழலில் செய்வதறியாது, பழையபெட்டியை தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்பெயர் சூட்டவேண்டும் என்ற கட்டுபாட்டால் “சும்மா தேனீர் சாலை” நடத்தும் உரிமையாளர், சம்பளத்திற்க்கு வேலைபார்த்து எதிர்பாராமல் செத்துபோனவர்களுக்கு நாட்டுபற்றாளர் பட்டம் வழங்கபடல் என்று அங்கதத்துடன் ஆரம்பிக்கும் நாவல், பிறகு சீரியஸ் தொனிக்கு மாறிவிடுகிறது. இடப்பெயர்வால் அம்மன் கோவிலில் தங்கியிருக்கும் சுபத்திரையின் மகள் நடுஇரவில் வயசுக்கு வந்துவிட, அம்மனின் துணியை எடுத்து பயன்படுத்திகொள்கிறாள். அம்மனும் பெண்தானே புரிந்துகொள்வாள் என்று சுபத்திரை நினைக்கிறாள். இறந்துபோகும் பொடியனின் சடலத்தை கடலிலேயே வீசிவிட்டு பயணத்தை தொடர்கிறார்கள். ஆனால், கடல் அலையால் படகு உடைந்து நொறுங்கிறது.



படகு முழுகி, அமுதனின் செயற்கை கால் மட்டும் எத்திரியா நாட்டில் கரை ஒதுங்கிறது. எத்ரியா நாட்டு விடுதலை போராட்டத்தில், தனது காலை இழந்த இத்ரிஸ் என்னும் கிழவன் அந்த செயற்கை காலை எடுத்து ஆனந்த்ததுடன் முத்தமிடுகிறான் என்று முடிக்கிற இடத்தில் ஒரு தேர்ந்த கதை சொல்லியாக சயந்தன் தன்னை நிறுவிகொள்கிறார்.

ஏறக்குறைய எரித்திய நாட்டு விடுதலை போரும் ஈழவிடுதலை போரும் ஒரே மாதிரியானவையே. அறுபது லட்சம் மக்கள் தொகை கொண்ட எரித்திய நாடு, எத்தியோப்பியா இரண்டாம் உலகபோரில் தமக்கு விசுவாசமாக இருந்ததற்காக பிரிட்டிஸ் அரசால் எத்தியோப்பியாவிற்க்கு சன்மானமாக அளிக்கபடுகிறது எரித்திய நாட்டுபோராளிகள் தனிநாடு கேட்டு போராடுகிறர்கள். முப்பது ஆண்டுகால போருக்கு பின், ஐக்கியநாட்டு பொதுவாக்கெடுப்பின் மூலம் 1993ம் ஆண்டு எரித்திய நாடு விடுதலை அடைகிறது. இத்தனைக்கும் எரித்திய 9 இனக்குழுக்களை கொண்ட சிறிய நாடு. பல்வேறு மொழிகள் பேசபடுகிறது. எத்தியோப்பியாவுடன் நிலத்தால் இணைக்கப்பட்டது. துப்பாக்கியை தோளில் சாய்த்தபடி, ஓ வழிபோக்கனே, உன் வழியில் எரித்திய தாயை பார்த்தால் கூறு, அவள் விடுதலையை நானே பெற்றுதருவேன் என்று பாடிய இத்ரிஸ், இப்போது அமுதனின் செயற்கை காலில் நின்றபடி நட்சத்திரங்களை பார்த்தவண்ணம் பாடிதிரியக்கூடும். .  







  

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..