Saturday, August 30, 2014

நான் எப்போ வருவேன்.. எப்படி வருவேன்..

தன்னுடைய புதுப்படம் தயாரிப்பு நிலையில் இருக்கும்போதெல்லாம், அரசியலுக்கு, வந்தாலும் வருவேன்..ஆனா அது ஆண்டவன் விருப்பம்.. என்றெல்லாம் கொளுத்தி போட்டு, ரசிகர்களின் டெம்போ குறையாமல் பார்த்துக் கொள்வது ரஜினியின் வழக்கம்தான். அவரை சற்றும் ஏமாற்றமடைய விடாமல் உடனே ஊடகங்கள், ரஜினி வருவாரா? 2016 எலக்‌ஷனுக்கு எண்டரி என்றெல்லாம் தலைப்பு கொடுத்து, விவாதங்களை துவக்கி வைக்கின்றன.

உண்மையில் இது போன்ற செய்திகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? ரஜினிக்கு இருந்த அரசியல் வாய்ப்பு அடைப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. 1996ல் இருந்த அரசியல் சூழல், இளைஞர்களின் அரசியல் அறிவு இவையெல்லாம் வேறு. இன்றைய சூழல் முற்றிலும் வேறு.

ரஜினியின் தீவிர ரசிகர்கள் எல்லாம், இனி ரஜினி அரசியலுக்கு வரபோவதில்லை என்று ஏமாற்றத்துடன் முடிவெடுத்து, வாழ்க்கையின் பல கட்டங்களைத் தாண்டி, இன்று குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பி வைத்து விட்டு, நன்கு சரிந்த தொந்தியுடன் கிடைத்த வேலைகளில் தம்மை பொருத்திக் கொண்டு ஓய்ந்துவிட்டனர்..இனி ரஜினி அரசியலுக்கு வந்தாலும், இவர்களால் ஓடியாடி பிரச்சாரம் செய்யவோ, மாற்றுக் கட்சியினருடன் மல்லுக் கட்டவோ முடியாது என்பதுதான் நிதர்சனம்

சரி போகட்டும், அரசியலில்தான் அப்படி என்ன புரட்சி கருத்துக்களை இதுவரை அவர் கூறியுள்ளார்? மணிரத்னம் வீட்டில் பெட்ரோல்பாம் விழுந்த போது, நாட்டில் சட்டஒழுங்கு சரியில்லை என்றார். கோவையில் பாம் வெடித்தபோது, இதில் வெளிநாட்டு கை இருக்கிறது. அதைவிட உள்நாட்டு கை இருக்கிறது என்று சிகரெட் பிடித்தபடி, தெள்ளத்தெளிவான கருத்தை கூறினார்.

இலங்கை ராவணன் ஆண்ட தேசம்..அனுமார் அங்கு போய் வைத்த தீ இன்னமும் எரிந்துக் கொண்டிருக்கிறது. எனவே தான் அங்கு உள்நாட்டு போர் நடக்கிறது. அங்கு அமைதியான சூழல் ஏற்பட வாய்ப்பே இல்லை. என்று தனது தீர்க்கதரிசனத்தைக் காட்டினார்.

இவரை வைத்துக் கொண்டு ஏன் இப்படி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்?