Sunday, July 13, 2014

தமிழ்திரையுலகின் பொக்கிஷம்

அது 1992. நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மன்னார்குடிக்கு வைரமுத்து வந்திருந்தார். தேசியமேல்நிலைபள்ளியின் சாரதி கலையரங்கத்தில் நிற்க கூட இடமில்லை. ரோட்டைத் தாண்டி, ஒத்தைத்தெரு பிள்ளையார்கோவிலின் மண்டபத்தின் மேல் எல்லாம் ஏறி நின்றது கூட்டம்.கம்பீரமான தமிழில் சொக்கி போய் நின்றது மக்கள் வெள்ளம்.

முகிலினங்கள் அலைகிறதே,முகவரிகள் தவறியதோ..
முகவரிகள் தவறியதால் அழுகிறதோ, அது மழையோ

போன்ற வைரவரிகள் என்னுள் ஏற்படுத்திய கிறக்கம் அந்த காலக்கட்டத்தில் சொல்லில் அடங்காதது. கூட்டம் முடிந்தவுடன், BSA SLR சைக்கிளில் துரத்திக் கொண்டே போய் டி.பியில் உள்ளே நுழைந்தேன். இரவு 11 மணிக்கு அங்கேயும் ஒரு பெருங்கூட்டம் நின்றது. எப்படியோ உள்ளே போய் ஆட்டோகிராப் வாங்கினேன். எனக்கு பாடல் எழுத வேண்டும் என்று ஆசையிருக்கிறது ஸார் என்றேன்.. சிரித்துக் கொண்டே பெயரை கேட்டார். பழைய தமிழிலக்கியங்கள் படிங்க. ஒரு பிடி கிடைக்கும் என்றார்.. ஒரு கவிஞர் போலவே மிடுக்குடன் வீட்டுக்கு திரும்பி கனவுகளுடன் உறங்கினேன்..





அன்று முதல், இன்று வரை எனக்கு அவர் ஆச்சரியங்களை கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். பிறகு சரியாக 10 வருடங்கள் கழித்து, 2002ல் தோக்கியோ வந்தார்.. ஆசைஆசையாய் பொங்கல் விழாவில் நெருங்கி போய் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். கடைசியாய் சாகாவரம் பெற்ற, தமிழ் சினிமா ரசிகனின் நெஞ்சினில் ஏக்கமாய் உறைந்து விட்ட அந்த கேள்வியை கேட்டேன்.. நீங்க மறுபடியும் ராஜா சார் மியூசிக்லே பாட்டு எழுத வாய்ப்பே இல்லையா சார்? ஆழமான பார்வையுடன், இதழோரம் மெலிதாக சிரித்து, பார்க்கலாம் செந்தில் என்றார்..

தென்றல் தொட்டதும், மொட்டு வெடித்தால்,
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா?

கொல்லை துளசி, எல்லை கடந்தால்,
வேதம் சொன்ன சட்டங்கள், விட்டுவிடுமா?

என்று இரண்டு வரிகளில், அந்த படத்தின் கதையை சொல்வதாகட்டும்..

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

என்று காதலின் தவிப்பை சொல்வதாகட்டும்,

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் வைரமுத்து…
அவரை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது ஏ.ஆர் ரகுமான்.

முறைதவறிய ஒரு காதலை நியாயபடுத்த வேண்டும். அந்த காதலினால் அவமானத்துக்கு ஆளாகியிருக்கும் ஊர் பெரிய மனிதரின் சோகத்துக்கு ஆறுதல் கூற வேண்டும்..

களங்கம் வந்தாலென்ன பாரு.. அதுக்கும் நிலான்னுதான் பேரு..
அட மந்தையிலே நின்னாலும், நீ வீரபாண்டி தேரு..

தேர்திருவிழா நாளை தவிர மற்ற எல்லா நாளும் மந்தையில், காற்றிலும், வெயிலும் தனியாகதான் நிற்கிறது.. அதனாலென்ன.. அப்பவும் அது தேர் அல்லவா…

திரும்பவும் 25 ஆண்டுகள் கழித்து பிறன்மனையை காதலிக்கும் சிக்கலில் விழும் ஒருவனுக்கு ஆறுதல் கூறுகிறது வைரமுத்துவின் எழுதுகோல்..

அடி தேக்குமர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்..

அக்னி பழமென்று தெரிஞ்சிறுந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி..

விதி சொல்லி வழி போட்டான் மனுசுபுள்ளே
விதிவிலக்கில்லாத விதியும் இல்லை..

எவ்வளவு எளிதாக ஒரு அறமீறலை நியாயபடுத்தி விடுகிறார்..

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.. சந்தேகமே இல்லாது தமிழ் திரையுலகின் ஒப்பற்ற ஒரு பாடலாசிரியன் வைரமுத்துதான்.. வீம்புக்காகவும், வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்க்காகவும் ஒரு சிலர், வேறு சில பாடலாசிரியர்களின் பெயர்களை சொல்வதுண்டு.. அது ஒரு மகத்தான கலைஞனுக்கு செய்யும் அநீதி..

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Tuesday, July 1, 2014

டாஸ்மாக் ஆபாசங்கள்

உலகிலேயே அசுத்தமான இடம், தமிழ்நாட்டின் டாஸ்மாக் பார் தான். குடிக்க வருபவர்களை, சாக்கடை பன்றிகள் போல் நினைத்தே, அப்படி பராமரிக்கபடுகிறது. குடிமகன்கள்,உள்ளே நுழைந்தவுடனேயே, துப்ப தொடங்கிவிடுகிறார்கள்.. காலுக்கு கிழேயே துப்பிக் கொண்டு, கவலையே படாமல் குடிக்கிறார்கள். அடுத்து வரும் நபர் அந்த எச்சிலின் மேலேயே, மேலும் துப்புகிறார்.. பீர், விஸ்கி என எல்லா பிராண்டுகளும் எப்போதும் பத்து ரூபாய் அதிகம் வைத்தே விற்கபடுகிறது. இந்த பணம் உள்ளூர் அளும்கட்சி நபர்களுக்கு போவதாக சொல்கிறார்கள்.. சைட் டிஸ் என்ற பெயரில், நாறிபோன, பொதுவாக வீட்டில் சமைக்காத, குடல், ஈரல் போன்ற அயிட்டங்களை, அழுகிய தக்காளி விட்டு வதக்கி, அழுக்கு பிசுப்பு ஏறி கிடக்கும் பிளாஸ்டிக் தட்டுகளில் கொண்டு வந்து வைக்கிறார்கள்..சராசரியாக ஒரு மணி நேரத்திற்க்கு ஒருவர் வாந்தி எடுக்கிறார். விளக்குமாறு கொண்டு, நான்கு முறை தேய்த்து விட்டு, மீண்டும் சேர் போடபடுகிறது. குடிப்பது குறித்து கேவலமான குற்ற உணர்வை இந்த பார்கள் தான் ஏற்படுத்துகின்றன. போதையுடன், கொலைசெய்தது போன்ற குற்ற உணர்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பும், நபர் மனைவி, பிள்ளைகளை அடித்து நொறுக்கி அமைதியடைகிறார்.. குடியை ஒழிக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, இப்படி குடிப்பவர்களை கேவலப்படுத்தி, அவர்களை மீளமுடியாத சாக்கடையில் தள்ளி, அவர்களது பையிலிருந்தே பிக்பாக்கெட் அடித்த பணத்தை கொண்டு, இலவசங்கள் தரப்படுகிறது..