Sunday, December 8, 2013

ஞாநியுடன் கேணி சந்திப்பு


  1. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சென்னை வந்திறங்கிவிட்டு, சென்னை ஈஸ் டூ ஹாட், ஐம் ஸ்டில் இன் ஜெட்லாக் என உதார் விடும் வழக்கமான என்.ஆர்.ஐயின் பதிவல்ல இது. வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம், ஊருக்கு டிக்கெட் போட்டுவிடும், வாய்ப்பில்லை என்றால் வாய்ப்பை உருவாக்கிவிடும் (அட, இரண்டாவது பெண் குழந்தை எல்லாம் இந்த லிஸ்ட்லே சேராதுங்க) ஒரு என்.ஆர்.ஐயின் பதிவுதான் இது. 


    நெடுநாட்களாக ஞாநி அவர்கள் நடத்து...ம் கேணி கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையிருந்தது. இந்த முறை 10.00 மணிக்கு திருச்சிக்கு டிக்கெட் போட்டுவைத்திருந்த நிலையிலும் கூட்டத்துக்கு எப்படியாவது போய்விடுவது என்று முடிவு செய்து பைக் எடுத்தேன். கலைஞர் கருணாநிதி நகர் எல்லாம் போய் வருடகணக்காகிறது என்பதால், முகவரி கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல் அழகிரிசாமி சாலை முனையில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் வீட்டு நெம்பர் 39 என்றால், பயசா, புதுசா என்றார்கள். நல்லவேளை பத்திரிக்கையாளர் ஞாநி என்று சொன்னவுடன் சரியாக அடையாளம் காட்டினார்கள். 

    கூட்டம் சிறப்பாக நடந்தது. பத்ரி தனது தொழில் பற்றியும், அதில் தான் கடைபிடிக்கும் நேறிகள் பற்றியும் நேர்மையாக பேசினார். பள்ளிக் குழந்தைகளிடம் படிப்பார்வத்தை தூண்டுவதற்க்காக அவர் எடுத்து வரும் முயற்சிகள் பற்றி சொன்னார். பெரும்பாலான பள்ளி குழந்தைகள் அதுவும் எட்டாம் வகுப்பு வரை வந்த மாணவர்கள் கூட தமிழை சரியாக படிக்க முடியாமல் திண்டாடும் அவல நிலையை அவர் கூறிய போது, மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போதைய பொருளாதர நிலையில், கார்ப்பேரஷன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உண்மையிலேயே சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும், கடுமையில் ஏழ்மையில் தவிக்கும் குழந்தைகளே. இப்படி அவர்கள் தமிழ் கூட படிக்கமுடியாது திண்டாடினால் அவர்கள் என்ன ஆவார்கள் என்று நினைக்கும் போது, நமது கல்வியாளர்கள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் கடும் கோபம் எழுகிறது. 

    கூட்டம் முடிந்தவுடன் தி.நகர் வழியாக திரும்பினேன். சென்னையின் எல்லா சாலைகளிலும் ஆட்டோக்கள் சடுகுடு ஆடுவதை காண முடிந்தது. சாலையில் வரும் எந்த வாகனமும் ஒரு பொருட்டே அல்ல என்பது போல், மோதுவது போல் போய் சடாரென்று திருப்புவதில் என்னதான் சுகமோ இவர்களுக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு ஆட்டோ, பாண்டி பஜார் சாலையில் வேகமாக வந்து கட்டடிக்க, சாலையை கடந்து கொண்டிருந்த ஒரு நாற்பது வயது அம்மாவும், ஆறு வயது பெண் குழந்தையும் திக்குமுக்காடினார்கள். எப்போதும் திருப்புவது போல், ஆட்டோகாரர் ஸ்டியரிங்கை திருப்பி விலகினார். ஆனால், குழந்தையின் காலில் பின்சக்கரம் ஏறி விட்டது. வலியில் துடித்து விட்டாள். அந்த ஆட்டோகார தடியன், கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், தலையை மட்டும் வெளியே நீட்டி, சின்னகொயந்தையை தூக்கிகினு வராம, நடத்தி கூட்டிகினு போவுது பார் என்று திட்டிவிட்டு சென்றுவிட்டான். அந்தம்மா குற்ற உணர்ச்சியில் தவித்து போய் கண்ணில் நீர் வர வலியால் தவிக்கும் குழந்தையை தூக்கிக் கொண்டு, நகர்ந்தார். 

    சென்னை சாலைகள் எப்போதும் நடப்பவர்களுக்கான சாலைகள் அல்ல என்றாலும், இந்த முறை இன்னும் மோசமாக அவர்கள் சுரண்டப்பட்டு சாலையின் ஓரங்களில் நடப்பதே ஒரு குற்றம் என்ற வகையில் தள்ளப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது. சாலையின் எந்த இடத்திலும்
    இவர்கள் கடப்பதற்க்கான சீப்ரா கிராஸிங் இடங்களை காண முடியவில்லை. ஒரு பக்கம் பிளாட்பர கடைகளும், மற்றொரு பக்கம் ரவுடி ஓட்டுநர்களாலும் சுரண்டப்பட்டு, குற்ற உணர்ச்சியிலேயே மக்களை நடமாட விட்டிருப்பதுதான் நமது அரசாங்கங்களின் சாதனை போலும்.

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..