Friday, August 31, 2012

அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு

நான் முதன்முதலில் அசோகமித்திரனை படித்தது, பள்ளியிறுதியில். பாலகுமாரன் மற்றும் பொன்னியின் செல்வனில் சுழன்றுக் கொண்டிருந்தபோது, எப்போதும் புத்தகம் வாங்கும் கடையில், இந்தியா டுடேவின் இலக்கிய மலர் என்னை ஈர்த்தது. நல்ல மழை நாளான அன்று, வாங்கிய கையோடு, அதில் இடம் பெற்றிருந்த அனைத்து படைப்புகளையும் படித்தேன். அந்த விதத்தில், தீவிர இலக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது இந்தியா டுடே இதழ் தான்.  அதில் இடம்பெற்றிருந்த அசோகமித்திரனின் சிறுகதை எனக்கு புதுவிதமான அனுபவத்தை தந்தது. அந்த கதை செகந்திராபாத்தில் உள்ள ஒரு மேன்ஷனில் வாழும் ஒரு முதிய பேச்சுலரை மையமாக கொண்டது. விளிம்பு நிலை மக்களை, சேரியில் உழன்றுக் கொண்டிருப்பவரை எப்படி மையமாக்கி, ஜெயகாந்தனின் படைப்புகள் பேசியதோ, அதே போல், அசோகமித்திரனின் படைப்புலகம், சாமானியனின் உலகம். இது மீண்டும் மீண்டும் பேசுவது சாமானியனின் சிக்கலையே. இங்கு ரேஷனில் அரிசி வாங்க, மஞ்சள் பையுடன், சட்டை பையில் இருக்கும் நோட்டுக்களில் ஒன்று செல்லுமா, செல்லாதா என்ற பயத்துடன் க்யூவில் நிற்கும்  மனிதன்தான் கதாநாயகன். நாட்டின் எந்த பிரச்சனையிலும் முதலில் அடிபடுவது  அவன்தான். பதினெட்டாவது அட்சக்கோடு பேசுவதும் அதை போன்ற ஒருவனின் சிக்கலைதான்.



அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவலை பற்றி பார்க்கும் முன், சற்று ஹைதராபாத்தின் கதையை பார்த்து விடுவது நல்லது. இந்தியாவிற்கு சுதந்திரத்தை கொடுத்து விட்டு, வெள்ளைகாரர்கள் கப்பலேறும் போது, இந்தியாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானஙகள், தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டு இருந்தன. இந்திய சுதந்திரத்திற்கு பின், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேருவின் முயற்சியால் அனைத்து சமஸ்தானங்களும் ஒன்றிணைக்கபட்டு இந்தியா வலுவடைந்தது. ஆனால் இந்தியா சுதந்திரத்திற்கு பின்னும், தனி சமஸ்தானமாக நீடித்தது ஹைதராபாத். முதலில் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம், அவரது சமஸ்தானத்தை, சுதந்திர நாடாக தானே ஆள ஆசைப்பட்டார். நான்கு புறமும், இந்தியாவால் சூழப்பட்ட ஒரு மாநிலம், அவ்வாறு நீடிக்க முடியாது என்று புரிந்த போது, பாகிஸ்தானுடன் இணைத்து விடலாம் என்று பகல் கனவு கண்டார். இதை எல்லாம் நிஜாமே, தன்னிச்சையாக முடிவு செய்தார் என்பதை விட, அவரால் அங்கு ஆட்சியில் பிரதமராக உட்கார வைக்கபட்ட மிர் லைக் அலியும், ரஜாக்கர் எனப்படும் கூலிப்படையை வைத்துக் கொண்டு அராஜகம் செய்த காசிம் ரஜ்வியும் பெரும்பாலான முடிவுகளை எடுத்தனர். சமஸ்தானத்தின் மிலிட்டரியை கொண்டு அந்த ரஜாக்கர்களுக்கு பயிற்சியும் அளிக்கபட்டது.


ஏறக்குறைய ஒரு கோடியே எழுபது லட்சம் ஹிந்துக்களையும், இருபது லட்சம் இஸ்லாமியர்களையும் கொண்டு அமைந்த மாநிலமான ஹைதராபாத் மக்களில், பெரும்பாலானோர் இந்தியாவுடன் இணைவதையே விரும்பினார்கள். ஆனால், இந்தியா சுதந்திரம் பெறும் சூழலிலும், சுதந்திரம் பெற்ற பின்னரும், ரஜாக்கர்கள் அங்கு வசித்து வரும் ஹிந்துக்களை தாக்குகிறார்கள். நிஜாம் பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்கிறார். இந்தியாவுடன் இணைக்கபடுவதை தடுக்க, நிஜாம் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை கொண்டு வந்து இறக்குகிறார். இந்த சூழலில் பதட்ட்த்தை தணிக்க ஹதராபாத் நிஜாமுக்கும், இந்திய அரசாங்கத்திற்க்கும், 1947லில் ஒரு வருட ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒரு வருடமும், ஹைதராபாத் அப்போதய சூழ்நிலையிலேயே நீடிப்பது என்றும், அதற்கு பிறகு சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கபடுகிறது. ஆனால், அந்த ஒரு வருட்த்தில் நிலைமை மோசம் ஆகிறது. கைகளில், வாள் மற்றும் துப்பாக்கி ஏந்திய ரஜாக்கர்கள் தெருக்களில் வலம் வருகிறார்கள்.

இது மாதிரியான சூழலில், அங்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குடும்பத்தின் மூத்த மகன் சந்திரசேகரின் கதைதான் இது. கதையின் ஆரம்பத்தில் அந்த புலம்பெயர் சூழலில், சந்துரு தன்னை நுழைத்துக் கொள்ளும் சித்திரம். பிறகு, அவனுடைய வயதுக்கு உரிய பருவ கோளறுகள். எந்த பெண்ணை கண்டாலும், அவன் மனது சலனம் கொள்கிறது. இந்த இயல்பான விஷயம் அவனை உறுத்துகிறது. அவ்வாறு சலனபடும் போதெல்லாம், தன்னுடைய காலால் நிலத்தை உதைத்து தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறான். கால் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டுகிறது. ஆனால் அவன் பொருட்படுத்துவதில்லை.  கிரிக்கெட் விளையாட்டிலேயே அவன் காலம் கழிகிறது. எந்த அரசியலும் இல்லாத, எந்த ஐடியலிசமும் இல்லாத ஒரு எளிய இளைஞன், வரலாற்று நிகழ்வுகளால் அடித்து செல்லபடுகிறான். அவன் வயதையே ஒத்த வசதியான இளைஞர்கள்/இளைஞிகள் எப்போதும் பாதிக்கபடுவதில்லை. அவர்களுக்கு உரிய உலகத்தில் அவர்கள் செளகரியமாக இருக்கிறார்கள். இழுத்து செல்லபடுவதெல்லாம், சாமானிய நடுத்தர சந்துருவை போன்ற இளைஞர்களே.  


இந்த சூழலில், கம்யூனிஸ்ட்கள் நிஜாமிடம் இருந்து நிலங்களை பறித்து, ஏழைகளுக்கு பங்கீடு செய்கிறார்கள். காங்கிரசும் கம்யூனிஸ்ட்களுடன் கை கோர்க்கிறது.  இதற்கு உதவும் லம்பாடிகள் எனப்படும் நாடோடிகளை, ஈவு இரக்கமில்லாது ரஜாக்கர்கள் மற்றும் நிஜாமின் மிலிட்டரி கொன்று போடுகிறது. அசோகமித்திரன், இந்த காட்சியை ஒரு வசனத்தில் கடந்து செல்கிறார். ஆனால் அது நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பு வலுவானது.

சந்துருவின் அப்பாவின் உலகம் சிறியது. தான் உண்டு தன்னுடைய ரயில்வே வேலை உண்டு என்று இருக்கின்ற அவரையும், இந்த கலவர சூழல் ஆட்டி வைக்கிறது. ஊரில் நிறைய பேர் இந்த் சூழலில் இருந்து தப்பிக்க திரும்பி போகிறார்கள். ஆனால் சந்துருவின் தந்தை அமைதியை எதிர்பார்த்து அங்கேயே காலம் கழிக்கிறார்.

சந்துரு தனது நண்பன் நரஸிம்ஹராவின் பேச்சைக் கேட்டு காங்கிரஸ்காரர்களை சந்தித்து, காலேஜ்க்கு முன் சத்யாகிரகம் செய்வதாக ரத்த கையெழுத்து இடுகிறான். கல்லூரி விழா ஒன்றில் விடுதலை, விடுதலை என்ற பாரதியின் பாடலை பாடுகிறான். ஆனால், அப்போதும் அவனுக்கு பாரதி குறித்தோ, அந்த பாட்டின் கருத்து குறித்தோ, பெரிய புரிதல்கள் இல்லை. இந்த பாடலை கேட்ட கல்லூரியின் வேதியியல் பேராசிரியர் தம்பிமுத்து, சந்துருவை தனியே அழைத்து அந்த பாடலை கற்றுக் கொடுக்க சொல்லும் இடம்தான், இந்த கதையின் முதல் மையமாக, எனக்கு தெரிந்த்து. தம்பிமுத்து பல ஆண்டுகளாக புலம் பெயர்ந்து, அந்த நிஜாமின் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய சுய அடையாளம் குறித்தோ, தனக்கு கல்லூரியில் திறமை இருந்தும் மறுக்கபடும் பதவி உயர்வு குறித்து அவருக்கு கவலை இருந்தாலும், அவற்றை எல்லாம் வெற்றிகரமாக மறைத்து கொண்டு வாழ பழகிவிட்டவர் அவர். அந்த மண்ணில், ஐடியலிசத்திற்க்கு எந்த பொருளுமில்லை என்று அவர் நினைக்கிறார். பாரதி என்றால் யார் என்று கேட்கும் அளவிற்க்கு தான் அவருக்கு ஈடுபாடு இருக்கிறது. ஆனாலும் சந்துருவின் பாடல் அவரை ஏதோ செய்கிறது. அதை கற்று கொண்டு பாடுகிறார். அப்போது, சந்துரு தான் போட்ட ரத்த கையெழுத்து குறித்து உளறியவுடன் அவர் பதட்டமடைகிறார். சந்துருவை இதில் ஈடுபட வேண்டாம். இதனால் அவ்னுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று சொல்கிறார்.

தம்பிமுத்துவுக்கு, நேர் எதிரான பாத்திரம் ஒன்று அசோகமித்திரனால படைக்கப்பட்டிருக்கிறது. அது சையது என்று அழைக்கபடும், சந்துருவுடைய அப்பாவின் பால்ய சினேகிதர். மாயவரத்தை சொந்தமாக கொண்ட அவர், ஹைதராபாத்தில் குடி புகுந்தவுடன் அந்த பூமியை தனது சொந்த பூமி என்று கருதிக் கொள்கிறார். பாகிஸ்தானுக்கு பரிந்து பேசுகிறார். இந்த இரண்டு பாத்திரங்களும் நம்முள் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

நிஜாமின் கை ஓங்க தொடங்கியவுடன் காட்சிகள் மேலும் தீவிரமடைகின்றது. இதுவரை, வெளியே வந்தே பேசாத, பக்கத்து வீட்டு காசிம், தனக்கு தண்ணீர் வராததற்க்கு காரணம், உங்கள் வீட்டில் பைப்பை திறந்து வைத்திருப்பது தான் என்று கூறி சந்துருவின் வீடு புகுந்து பைப்பை இறுக்கி மூடி செல்கிறான். போகும்போது, எருமை மாட்டை ஓங்கி உதைத்து போகிறான். எந்த அரசியல் அதிகாரத்திலும் நேரடியாக தொடர்பில்லாத சந்துருவை போலவே சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த காசிமை, எது இப்படி நடந்துக் கொள்ள தூண்டிகிறது?  நிஜாமின் கை ஓங்கும் போது தான் தன்னை மதரீதியாக அடையாளபடுத்திக் கொள்கிறான்.


நிலைமை மோசமானதும், ஒரு வருட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு இந்திய ராணுவம், ஹைதராபாத்க்குள் நுழைகிறது. ரஜாக்கர்கள் வெறும் வாளை ஏந்திக் கொண்டு, இந்தியா ராணுவத்தை எதிர்க்க போய் பாதி பேர் செத்து மடிகிறார்கள். மீதி பேர் ஓடி ஒளிகிறார்கள். இந்திய மிலிட்டரி ஹைதராபாத்தில் நுழைந்து, பெரும்பகுதியை கைப்பற்றியதாக செய்தி வருகின்ற போது, பக்கத்து வீட்டு காசிம் இருக்குமிடம் தெரியாமல் வீட்டிற்க்குள் ஒளிந்து கொள்கிறான்.  அவன் வீட்டிற்க்கு அடைக்கலமாக வந்து தங்கியிருக்கும் காசிமின் உறவினர்கள், சந்துருவை பார்க்கும் தோறும் வணக்கம் சொல்கிறார்கள். யாரிடமும் அதிர்ந்து கூட பேசாத சந்துருவின் தந்தை, காசிமின் விட்டிற்க்குள் சென்று, உங்கள் ரேடியோ எனக்கு வேண்டும், என்று அதிகாரமாக கேட்கிறார். சந்துரு வீட்டை தாண்டி குதித்து, காசிமின் வீட்டிற்க்குள் சென்று, ரேடியோவை தூக்கி வர செல்கிறான். அதுவரை, அவன் கொண்டிருந்த களங்கமற்ற தன்மை, இந்த காட்சியில் மாசடைந்து விடுகிறது. தன்னையும், ஒரு குழுவின் அங்கத்தினராக அவன் உணர்ந்து, தனது சுயதன்மையை இழக்கிறான். சொல்லபோனால், இதற்கு முன்பே காந்தி கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு, அவன் மனம் இதனை ஒரு முஸ்லிம் செய்திருக்க கூடுமோ? என்று யோசிக்க தொடங்கி விடுகிறது. எந்த அரசியலுமற்ற எந்த ஒரு பக்க சாய்வுமற்ற ஒருவன் படிபடியாக ஒரு குழுவின் அங்கமாக தன்னை உணர்ந்து, குழு மனபான்மைக்கு தள்ளபடுகிறான்.

காந்தியால் கூட காப்பாற்ற முடியாத அவனை, ஒரு பதினாறு வயது பெண் காப்பற்றுகிறாள். இந்திய மிலிட்டரி ஹைதராபாத்தில் நுழைந்தபின் இந்துக்கள் குழு, முஸ்லிம்களை தாக்குகிறது. இப்போதும், பாதிக்கபடுவது பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்துக்கள் ஆனாலும், முஸ்லிம்கள் ஆனாலும், தாக்கபடுவது என்னவோ ஏழைகள் தான். அந்த கலவரத்தில் சிக்கி கொள்கிற சந்துரு, ஏழை இஸ்லாமியர்கள் தங்கி இருக்கும் குடிசை பகுதிக்குள் நுழைந்து விடுகிறான். அங்கு இருக்கும் ஒரு குடிசைக்குள் நுழைந்து விட, அங்கு ஒண்டிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை காப்பற்ற, பதினாறு வயதிருக்கும் ஒரு சிறுமி சந்துருவின் முன் வந்து நிற்கிறாள். என்னை எடுத்துக் கொள், என் குடும்பத்தை விட்டுவிடு என்று சொல்லிக்கொண்டே தனது சல்வாரை கழட்டிவிட்டு நிர்வாணமாக நிற்கிறாள்.  சந்துரு அதிர்ந்து போகிறான். அவனுடைய அற உணர்வு தீண்டபடுகிறது.  ஐயோ என்று அலறிக் கொண்டே அங்கிருந்து ஓடுகிறான். திரும்பவும் சந்துரு தனது சுயத்தை கண்டுகொண்டதோடு கதை முடிகிறது.
 

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..